சென்னை குரோம்பேட்டையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவரின் வீட்டு கதவை நகராட்சி அதிகாரிகள் தகரத்தால் மூடி அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரில் பாதல் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற சென்றிருந்தார். அவர் 14 நாட்கள் கொரோனா சிகிச்சை முடிந்த பின்னர் இன்று புருஷோத்தமன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு திரும்பினார். அப்போது திடீரென பல்லாவரம் நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர். கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையிலும் அந்த குடியிருப்பு வளாகத்தின் ஒருபகுதியை நகராட்சி பணியாளர்கள் அடைக்க முயன்றனர். ஆனால் அப்பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கொரோனா சிகிச்சை பெற்ற நபரின் வீட்டு வாசலை தகரம் அடைத்து மூடிவிட்டனர் நகராட்சி பணியாளர்கள். இது அந்த குடியிருப்புவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
















