திருப்பூர்- ஊஞ்சப்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கடந்த 16-ந் தேதி கரடிவாவி பகுதி குடோனில் பான்மசாலா பொருட்களை பதுக்கி வைத்திருந்து கைதான கும்பலுடன் தொடர்பு உள்ளவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சொகுசு காரில் பான்மசாலா கடத்தி வந்த கோவை – கணபதியை சேர்ந்த குணசேகரன் (43), சங்ககிரியை சேர்ந்த தனராஜ் (47), சாத்தான்குளத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (33), கொடைக்கானலை சேர்ந்த சுந்தரபாண்டியன் (21), நெடுங்குளத்தை சேர்ந்த அந்தோணி ஜெகன் (41), தூத்துக்குடியை சேர்ந்த நவராஜ் (56) ஆகியோரை கைது செய்தனர். அவர் களிடமிருந்து 30 கிலோ பான் மசாலா பொருட்கள், 2 கார்கள், சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகளை கைது செய்த பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் தலைமையிலான தனிப்படையில் இடம்பெற்ற இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், செந்தில் பிரபு, கிருஷ்ணகுமார் மற்றும் போலீசாரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பாராட்டினார்.















