சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ; மாவட்ட கலெக்டர்

0
321

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் பிளஸ்-1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் மத்திய அரசின் www.scholarshiap.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2020-2021-ம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ -மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் வருகிற 31-ந் தேதிக்குள் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாணவ -மாணவிகளின் ஆதார் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தால் பகிரப்பட மாட்டாது.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ -மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT குறியீட்டு எண்ணை மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5-வது தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த மாணவ -மாணவிகள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here