ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினம் – ஆகஸ்ட் 13

0
299

திருக்குறளை படித்திருக்கிறீர்களா… அதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வாசகமும் அதன் அர்த்தமும், எல்லா தேசத்து மக்களுக்கும் எல்லா காலங்களிலும் பொருந்துவதாக மட்டுமில்லாமல், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளச் செய்யும் மருந்தாக இருக்கும். திருக்குறள் மட்டும்தான் அத்தகைய நேர்த்தி இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்.
தன்னலமின்றி, பொதுநலத்துடன் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள், வாழ்க்கையின் எந்தவொரு சவாலையும் தன் பொறுமையின் மூலம் எதிர்கொண்டவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய கொள்கையிலிருந்து சற்றும் பின்வாங்காத வரலாற்று நாயகர்கள், ஆன்மீகவாதிகள் உதிர்த்த கருத்துகள் கூட எக்காலத்துக்கும் பொருந்தும்படி இருக்கும் என்பதே உண்மை.
அந்த நாடு 40 ஆண்டுக்கும் மேலாக பொருளாதாரத் தடையை எதிர்கொண்டிருந்தது. அத்தியாவசியமாய் கிடைக்கவேண்டிய பல விஷயங்கள் அந்த மக்களுக்கு கிடைக்காமல் இருந்தது. தேசத்தின் கல்வியறிவே 30 சதவீதத்துக்கும் கீழாகத்தான் இருந்தது. பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டது. இத்தனை அவலங்களையும் சந்தித்த அந்த நாடு, இன்று உலகத்தின் பார்வையை தன்மீது திரும்ப வைத்திருக்கிறது.
நம் இந்திய தேசத்தின் ஒரு மாநில அளவிலான எல்லைப் பரப்பு மட்டுமே கொண்ட அந்த மிகச்சிறிய நாடுதான் இன்று உலகளவில் அதிகளவில் கல்வியறிவு பெற்ற நாடாக விளங்குகிறது. 2010 ஆம் ஆண்டு ஆய்வின்படி, அந்த நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 99.8 சதவீதம். 6 – 15 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி உள்ளிட்ட சட்ட திட்டங்களைக் கொண்ட அந்த நாடுதான், தனியார் பள்ளிகள் ஒன்றுகூட இல்லாத உலகின் ஒரே நாடு என்ற பெருமையும் தட்டிச்சென்றுள்ளது. அதேபோல தொழில்துறையில் 70 சதவீதம் பெண்களுக்கு முன்னுரிமை, 2006 ஆம் ஆண்டு ஆய்வின்படி உலகின் தலைசிறந்த மருத்துவசேவையளிக்கும் அந்தப் பெருமையையும் அந்தச் சின்னஞ்சிறிய நாடுதான் பெற்றிருக்கிறது. உலகில் எய்ட்ஸ் நோய் இல்லாத நாடும், பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு மிக மிகக் குறைவான நாடும் அதுதான்.
இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அந்த நாட்டை உலகின் பார்வைக்கு திரும்பிப் பார்க்க வைத்த அந்தப் பெருமை, ஒரு தலைவனால் நிகழ்ந்தது. அந்த நாடு கியூபா. தன்னலமற்ற அந்தத் தலைவன் ஃபிடல் காஸ்ட்ரோ.
பல்வேறு நாடுகளின் அடக்குமுறையினால் மூன்று நேரம் உணவில்லாமல் பஞ்சத்தில் திளைத்த கியூபாவில் இன்று சொந்தவீடில்லாத ஒருவர் கூட இல்லை எனும் அளவிற்கு வரலாற்றை மாற்றியமைத்த அத்தனை பெருமையும் ஃபிடல் காஸ்ட்ரோவைத்தான் சாரும். உலக அளவில் 50 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒரே தலைவர் என்ற பெருமையும் ஃபிடல் காஸ்ட்ரோவிற்குத்தான் உண்டு.
பல்வேறு போராட்டங்கள், பல்வேறு வலிகள், பல்வேறு சவால்கள்… அத்தனையிலும் கொண்ட மாறாத உறுதி, வெற்றியே தீர்வு என்பதை மக்களையும் உணரச் செய்த பாங்கு இவை அத்தனைக்கும் மேலாக இது நடந்தால் இது எனக்கு கிடைக்கும் என்ற எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல், என் நாடு, என் தேசம், என் மக்கள், அவர்களின் வாழ்வாதாரம் என்ற பொது நல கொள்கைதான் இன்று தேச பேதமில்லாமல் ஃபிடல் காஸ்ட்ரோவை நாமும் கொண்டாடுகிறோம்.
‘இந்த உலகமே என் நாடு, அதில் வாழும் ஒவ்வொரு போராளியும் என் சகோதரர்கள்’ என்று உரக்கச் சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ, ‘ஜனநாயகம் என்பது என்ன தெரியுமா, மனிதனை மனிதன் சுரண்டாமல் தனது முழு சுதந்திரத்துடன் வாழ்வதுதான்’ என்ற அவர் உதிர்த்த தத்துவம் கியூபாவுக்கு மட்டுமல்ல, ஆகஸ்ட் 15, 2017 அன்று 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடப்போகும் நம் தேசத்திற்கும் பொருந்தும்.
‘கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்! – ஃபிடல் காஸ்ட்ரோ’
ஆகஸ்ட் 13, ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here