சென்னை ராயபுரம் வடக்கு மாதா கோயில் தெருவில் உள்ள போரூரை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 23 ஆம் தேதியன்று பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கபட்டது. இது தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளில் கொள்ளையர்களில் ஒருவன் கையில் பச்சை குத்தியிருப்பதை அடையாளம் கண்டு கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் கொள்ளையர்கள் செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் மதன் என்கிற லொட்ட மதன்(19),
கோபி என்கிற கோபிநாத்(19),
விஷ்வா என்கிற ஸ்கேல்(19) என்பதும், இதில் மதன், கோபி ஆகியோர் மீது பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மேற்படி நபர்கள் வடசென்னைக்குட்பட்ட திருவொற்றியூர், காசிமேடு, மணலி, பட்டாளம், வேப்பேரி அம்பத்தூர் உட்பட 12 காவல் சரகங்களில் பல்வேறு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2,60,000 பணம் மற்றும் விலையுயர்ந்த டிவி, ஹோம் தியேட்டர் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சென்னையில் வேறு எங்கெல்லாம் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












