மும்பையை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தேசியவாத காங்.,கை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, பரம்வீர் சிங் ஊழல் குற்றச்சாட்டு கூறினார்.இந்நிலையில் தலைமறைவாக உள்ள பரம்வீர் சிங், மும்பை மதுபான விடுதி உரிமையாளரை மிரட்டி 9 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக, மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தானே மாவட்டத்திலும் அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.பரம்வீர் சிங் மீது, ஜாமினில் வெளிவர முடியாத, ‘வாரன்ட்’ பிறப்பித்தும், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து பரம்வீர் சிங் உள்ளிட்ட அதிகாரிகளை குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தும்படி, மும்பை நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்று பரம்வீர் சிங் உள்ளிட்ட அதிகாரிகளை, மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றவாளிகளாக நீதிமன்றம் நேற்று பிரகடனப்படுத்தியது.இதன் வாயிலாக பரம்வீர் சிங்கின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.














