போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் குறித்து பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்டமசோதாவை சட்டசபையில் இன்று அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார்.
1908-ம் ஆண்டு பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யும் அலுவலர் அல்லது பிற அதிகார அமைப்பால் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணத்திற்காக கூட ரத்து செய்வதற்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. போலியாக ஒருவர் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதனை நீதிமன்றம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையை மாற்றி பத்திரப்பதிவு தலைவரே இனி போலி பத்திரப்பதிவை ரத்து செய்வதற்கு வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.













