வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை போதையில் இருந்த ஒருவர் பாட்டுப்பாடி நடனமாடி கொண்டிருந்தார்.
இதையடுத்து பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சை கையால் தூக்க முயன்றார். சுமார் அரை மணி நேரம் வரை தூக்க முயற்சி செய்து முடியாததால் ஆத்திரமடைந்து பஸ்சின் டிரைவர் அருகிலுள்ள கதவை திறந்து வேகமாக மூடிவிட்டு வேறு இடத்துக்குச் சென்றார்.
அப்போது பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அவரை வேடிக்கை பார்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் பஸ் பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்.
அவரது ஆபாச வார்த்தைகளைக் கேட்ட பயணிகள் அங்கிருந்து வேறு இடத்திற்கு புறப்பட்டு சென்றனர். போதை ஆசாமி சுமார் 2 மணி நேரம் பஸ் பயணிகளை அலற விட்ட சம்பவம் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.
பழைய பஸ் நிலையத்தை ஒட்டிய படியே டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. இதில் மது குடிப்பவர்கள் பஸ் நிலையத்தில் விழுந்து கிடப்பதும் அங்கிருக்கும் பயணிகளுக்கு தொல்லை கொடுப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
மேலும் பழைய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடைகளால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.














