பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தண்டையார்பேட்டை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் எதிரே சென்னை பெருநகர் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குப்புசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை உயர்த்தி வருகிறது என்றும் தற்பொழுது கடுமையாக பெட்ரோல் விலையை 100 ரூபாய்க்கும் டீசலின் விலையை 84 ரூபாய்க்கும் கேஸ் சிலிண்டரின் விலையை 795 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மோட்டார் வாகன தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளனர் என்றும் இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயிகளை நசுக்குவது போல் மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பறிப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் நடுத்தர மக்கள் கேஸ் விலை உயர்வால் கடுமையாக பாதிப்படைந்து உள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
விலையை குறைக்காத பட்சத்தில் விவசாயிகளை போன்று ஒட்டுமொத்த மோட்டார் வாகன தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஜெயராமன், லோகநாதன் மற்றும் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.















