யில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, 65, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த, 11ம் தேதி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி, ‘டுவிட்டரில்’ பதிவிட்ட அவர், தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தெரிவித்து இருந்தார். அதனால், தன்னை சமீபத்தில் சந்தித்தவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ளவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் கேட்டுக் கெண்டிருந்தார்.
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த, சுரேஷ் அங்காடி, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பா.ஜ., உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெலகாவியை சேர்ந்த சுரேஷ் அங்காடி, 1955ம் ஆண்டு பிறந்தார். சட்டப்படிப்பு முடித்த அங்காடி, சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்பு கொண்டு இருந்தவர். கடந்த, 1980ல் பா.ஜ., துவங்கிய போது, அதில் இணைந்தார்.பெலகாவி லோக்சபா தொகுதி உறுப்பினராக, 2004ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். கடந்த ஆண்டு மே மாதம், ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.
கர்நாடகாவில், பா.ஜ., முன்னணி தலைவராக இருந்து வந்த சுரேஷ் அங்காடியின் மறைவு, பா.ஜ.,வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.மறைந்த சுரேஷ் அங்காடிக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர்.
















