வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது 42 குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகந்தி வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.
நேற்று காலையில் வழக்கம்போல் ஸ்ரீதர் அவரது மனைவி சுகந்தி ஆகியோர் வீட்டை பூட்டிக்கொண்டு கல்லூரிகளுக்குச் சென்று விட்டனர் அவரது மகள் பள்ளிக்குச் சென்று விட்டார் மதியம் மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த ஸ்ரீதர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார் தொடர்ந்து உள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஹாலில் இருந்த மேஜை டிராயரில் இருந்த சாவியை எடுத்த கொள்ளையர்கள் பீரோவைத் திறந்து அதில் இருந்த 24 சவரன் தங்க நகைகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 4 வெள்ளி கொலுசுகள் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது உடனடியாக ஸ்ரீதர் தனது மனைவி சுகந்திக்கு செல்போன் மூலம் வீட்டில் திருடு நடைபெற்றது குறித்து தகவல் தெரிவித்தார் மேலும் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் விரைந்து வந்த சுகந்தி வீட்டில் வந்து பார்க்கும் போது பீரோவில் இருந்த 24 சவரன் நகைகள் மட்டும் திருடுபோய் இருந்தன மற்றொரு இடத்தில் பையில் போட்டு மறைத்து வைத்திருந்த 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையர்கள் கண்ணில் படாமல் தப்பியது தெரியவந்தது.
இந்த திருட்டு குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி,டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர்,ஏட்டுகள் மோசஸ்,சந்திரபாபு உள்ளிட்டோர் விரைந்து வந்து திருட்டு நடைபெற்ற வீட்டில் விசாரணை நடத்தினர் மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் திருட்டு நடைபெற்ற வீட்டில் ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திருட்டுப்போன பொருட்கள் மதிப்பு சுமார் 7 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
பட்டப்பகலில் மெயின் ரோட்டுக்கு சில நூறு அடிகள் தொலைவில் உள்ள எப்போதும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளையர்கள் காம்பவுண்ட் சுவர் எகிறி உள்ளே குதித்து அங்கே இருந்த கடப்பாரையால் பூட்டை உடைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது போலீசார் திருட்டு நடைபெற்ற வீட்டின் அருகில் உள்ள பகுதிகளில் ஏதாவது கட்டட பணியை நடைபெற்றதா என்பது குறித்தும் புதிதாக அந்நிய நபர்களின் இப்பகுதியில் நடமாடினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.















