சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற லொட்ட ஆனந்த்(24). இவர் ஆர்கே நகர் காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியாவார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தான் எந்தவித குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமியிடம் பிணைய பத்திரத்தை எழுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியன்று நேதாஜி நகர் பகுதியில் வாலிபரை வழிமறித்து தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக ஆனந்தை ஆர்கே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பிணைய பத்திரம் எழுதி கொடுத்து ஓராண்டுக்குள் அவர் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பிணைய பத்திரத்தை மீறி அவர் செயல்பட்டதால் அவரை மீதமுள்ள 91 நாட்கள் சிறையில் அடைக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் உத்தரவிட்டார். துணை ஆணையாளர் உத்தரவை தொடர்ந்து ஏற்கனவே சிறையில் இருக்கும் அவர் தொடர்ந்து 91 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.














