சேலம் வழியே கேரளா சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ஆர்பிஎப் போலீசார் பறிமுதல் செய்து கடத்தி வந்தவர் பற்றி விசாரித்து வருகின்றனர்.
வட மாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியே வரும் அனைத்து ரயில்களிலும் ஆர்பிஎப் போலீசாரும், தமிழக ரயில்வே போலீசாரும் தொடர் சோதனையை நடத்தி வருகின்றனர். சேலம் ஆர்பிஎப் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார் மீனா தலைமையில் எஸ்.ஐ. கார்த்திகேயன், ஏட்டுகள் சௌந்தரராஜன், பெரியசாமி, கமலநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று காலை தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரசில் சோதனை நடத்தினர். சேலத்தில் இருந்து ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக பார்த்தனர்.
சங்ககிரி பகுதியில் சென்றபோது, பொது பெட்டியில் கழிவறை அருகே சந்தேகப்படும்படி, கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அதனை யாரும் உரிமை கொண்டாடாத நிலையில், ஆர்பிஎப் போலீசார் திறந்து பார்த்தனர். உள்ளே 4 பார்சல்களில் 8 கிலோ கஞ்சா இருந்தது. அதனை எடுத்து வந்த மர்மநபர், போலீஸ் சோதனையை பார்த்ததும், அதனை அப்படியே போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து ₹1.84 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த பெட்டியில் சந்தேக நபர் இருக்கிறாரா? என விசாரித்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. பறிமுதலான கஞ்சாவை சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அங்கு வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
















