கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடியில் உள்ள ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதே போல் சென்னை நகரில் பல இடங்களில் ஒரே குடும்பத்தில் 2 பேர், 3 பேருக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் மாநகராட்சி சார்பில் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதே போல் தமிழகத்தின் பல முக்கிய நகரங்களிலும் கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது.
ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இது தற்போது பல இடங்களில் நடைமுறைக்கு வந்த போதிலும் கொரோனா பரவுவது இன்னும் குறையவில்லை.
இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் என்னென்ன கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளில் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன? எத்தனை பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
















