ரேஷன்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்;

0
233

சேலம் பொன்னம்மாபேட்டை கார்பெட் தெருவில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கார்பெட் தெரு, மாரி உடையார் தெரு, தெற்கு ரெயில்வே காலனி உள்பட அந்த பகுதியை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை கடந்த 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சர்வர் சரியாக இயங்காத காரணத்தினால் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பொன்னம்மாபேட்டை கார்பெட் தெருவில் உள்ள ரேஷன் கடையில் நேற்று காலை பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு குவிந்தனர். ஆனால் இந்த கடையில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடையில் இருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடையில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால் சர்வர் பிரச்சினை என்று கூறுகிறார்கள். பொருட்கள் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்துவிட்டு பழைய முறையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here