பருவ மழை துவங்கவுள்ள நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் மூன்று ஏரிகளில் தலைமைச் செயலர் இறையன்பு, நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகளை நீர்வளத் துறையினருக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கும் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால், இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது. இதுமட்டுமின்றி, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்தும், தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி நீர் திறக்கப்படுகிறது.















