தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன்(45). மினிவேன் டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் சாலையில் சென்று கொண்டிருந்த சாமியார் ஒருவரை பார்த்து அவரிடம் தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். உடனடியாக அந்த சாமியார் உனக்கு பில்லி சூனியம் சிலர் வைத்துள்ளதாகவும், அதனை எடுக்க சென்னை வருமாறும், வரும்போது ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 கோழிகள் எடுத்து வருமாறும் கூறியுள்ளார். இதை கேட்ட ராஜகுமாரன் தான் சொந்தமாக வைத்து ஓட்டி வந்த மினிவேனை ரூ.5 லட்சத்திற்கு விற்றுவிட்டு தனது உறவினருடன் சென்னை வந்து வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகே அந்த சாமியாரிடம் ரூ.2 லட்சம் பணத்தையும், 2 கோழிகளையும் கொடுத்துள்ளார். அதை பெற்று கொண்ட சாமியார் பூஜை பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றவர் திருப்பி வரவேயில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜகுமாரன் சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து ஆய்வாளர் பென்சாம் தலைமையில் தலைமை காவலர்கள் கார்த்திக், பரிமளா, சவுந்தரபாண்டியன், காவலர் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து பணத்தை மோசடி செய்த சாமியார் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போலீசார் பணத்தை மோசடி செய்த சாமியார் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த சாமியார் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணையும் ஆய்வு செய்தனர். அதில் பேசியிருந்த ஒரு எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது வேளச்சேரியில் ஒரு வீட்டில் இதே கும்பல் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது.
உடனடியாக அங்கு சென்ற போலீசார் அங்கு பூஜை பணியில் இருந்த காசிமேட்டை சேர்ந்த பாப்பா(56), கொடுங்கையூரை சேர்ந்த சுரேஷ்(34), அரக்கோணத்தை சேர்ந்த சுரேஷ்(34), மதுரையை சேர்ந்த அமர்நாத்(21) ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்தனர். போலீஸ் வருவதையறிந்து பூஜை செய்வதற்காக காரில் காத்திருந்த யுவராஜ்(48) அங்கிருந்தபடியே தப்பி ஒடி தலைமறைவாகிவிட்டார்.
மேலும் பிடிபட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. மேலும் இவர்கள் ஒரு கும்பலாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்ததும், பிரச்சனையில் இருக்கும் யாரோ ஒருவரை தேர்வு செய்து அங்கேயே தங்கியிருந்து அவர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, பின்னர் முக்கிய குற்றவாளியான யுவராஜ் சாமியார் வேடத்தில் அங்கு சென்று உங்கள் வீட்டில் பிரச்சனை உள்ளது, உடல் நல குறைவு உள்ளது எனக்கூறி அவர்களது நம்பிக்கையை பெற்று பில்ல சூனியம் இருப்பதாக கூறி, அதனை எடுக்க ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 கோழிகள் தயார் செய்யுமாறு கூறிவிட்டு அவ்வாறு பணமும், கோழியும் தயார் செய்தபிறகு பணத்தை பெற்று கொண்டு தலைமறைவாகி விடுவதும் தெரியவந்தது.
மேலும் அவ்வாறு வேளச்சேரியில் ஒருவரை ஏமாற்றி பணத்தை பெற இருந்த நேரத்தில் போலீசார் 4 பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் பிடிபட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள யுவராஜை வலைவீசி தேடிவருகின்றனர். யுவராஜை பிடித்த பிறகே அவர் இதுபோல எவ்வளவு பேரை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
















