மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் டாக்டர் அசோக் விக்னேஷ், மதுரை அரசு மருத்துவமனையில் எம்.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறையில் எம்.டி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் டாக்டர் ஹரிணி (வயது 26). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி ஹரிணிக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது. அவருக்கு வீட்டில் வைத்து முதலில் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு வலி நிவாரணி ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து ஹரிணிக்கு காய்ச்சல் அதிகமாகி உடல்நிலை மோசமானது. உடனே அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் டாக்டர் ஹரிணி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று டாக்டரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஹரிணியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் தான் ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணமான 3 மாதத்தில் பெண் டாக்டர் திடீர் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியது















