தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் வருகிற 7-ந்தேதி (நாளை மறுநாள்) முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ‘தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்’ என்று டுவிட்டரில் இன்று பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் தனது அறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.














