சென்னையில் ரூட் தல விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.. கல்லூரி மாணவர்கள் தாங்கள் செல்லும் பஸ்களில் அல்லது ரயில்களில் ரூட் தல என்கிற டிரெண்டிங்கை கையில் எடுத்து வருகின்றனர்.போட்டி மனப்பான்மைதான் இந்த ரூட் தல விவகாரம்.. இது பெரும்பாலும் கலவரமாகவே மாணவர்களுக்குள் நடந்து முடிவடைந்துவிடுகிறது.கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவர்களின் பெற்றோர்களிடமும் பல முறை வலியுறுத்தியும் இதற்கான தீர்வு இன்றளவும் கிடைத்தபாடில்லை. நேற்றுகூட, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கல்லூரி காம்பஸில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மோதலில் ஈடுபட்டனர்,கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.போலீஸை பார்த்ததுமே சம்பந்தப்பட்ட மாணவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். கற்கல் தாக்கியதில் ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. மாணவர்களில் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில்தான், இந்த ரூட் தல விவகாரத்திற்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது,சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால்
பேசும்போது, வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் இனிமேல் கைது செய்யப்படுவார்கள். மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும். சென்னை மாநகரில் நேற்று 3 சம்பவங்கள் ரூட்டு தல பிரச்சினை தொடர்பாக நடைபெற்றுள்ளது. விசாரணையில் மாணவர்கள் மீது தான் தவறு உள்ளது என்று தெரிய வந்துள்ளது. எவ்வளவு அறிவுரை சொல்லியும், மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிதான் பயணித்து வருகிறார்கள்.அரசு ஊழியர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் சக பயணிகளும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்… அதனால், இவற்றை தடுக்கும் பொருட்டு வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இத்தனை காலமும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் என்ற எண்ணத்தில் தான், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கைது என்ற பிரச்சினையில் சிக்காமல் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














