பிற மாநிலங்களில் இருந்து வருவதற்கு இ-பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கேரள போலீசார் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழை தமிழக அரசின் இணையதளத்தில் சரிபார்த்து அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தமபாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார், முருகன் ஆகியோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்ல முயன்றனர். அங்கிருந்த போலீசார் சான்றிழை சரிபார்த்தபோது அது போலி என தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். கம்பத்தை சேர்ந்த விஜயகுமார், பண்ணைப்புரத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து கம்பம் மெட்டு இன்ஸ்பெக்டர் சுனில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தமிழகம் வந்த கேரள போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி சான்றிதழ் தயாரித்து கொடுக்க வைத்திருந்த கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.














