சென்னை: ஓடும் ரயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் மின் கம்பத்தில் மோதியதில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (16). இவர் பாரிஸில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி மதியம் கல்லூரி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் சென்றுள்ளார். சுமார் 12:20 மணிக்கு ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே சென்று கொண்டிருக்கும் ரயிலில் தொங்கியபடி சாகசம் செய்துள்ளார்.
அப்போது மின் கம்பத்தில் அடிப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார். உடன் சென்ற நண்பர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி சம்பவ இடத்திற்கு வந்த போது ரத்த வெள்ளத்தில் அபிலாஷ் சுயநினைவின்றி கிடந்துள்ளார். பின்னர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்த அபிலாஷ் தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அபிலாஷ் ரயிலில் ஏறி பயணம் செய்யும்போது சாகசத்தில் ஈடுபடுவது பின், மின் கம்பத்தில் மோதி தூக்கி எறியப்பட்ட வீடியோ காட்சியானது தற்போது வெளியாகியுள்ளது. நண்பர்கள் வீடியோ எடுத்த நிலையில் அடிப்பட்டு கீழே விழுந்ததும் அச்சத்தில் கத்தக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
















