அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நீடிப்பதால் இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே மோதல் நீடிக்கிறது. இருதரப்பும் தாங்களே முதல்வர் வேட்பாளர் என்பதில் தீர்மானமாக உள்ளனர்.முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியே இருக்கிறது. ஓபிஎஸ் தரப்புக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவும் இல்லை. இதனால் முதல்வர் வேட்பாளர் இல்லையெனில் பொதுச்செயலாளர் பதவியாவது தர வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்படுகிறதாம். ஏற்கனவே அதிமுக செயற்குழு நடந்த அன்றே, அக்டோபர் 7-ந் தேதியன்று அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவிப்பர் என ராஜ்யசபா எம்பி கேபி முனுசாமி கூறியிருந்தார். ஆனால் முதல்வர் வேட்பாளர், பொதுச்செயலாளர் பதவி ஆகியவற்றால் அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. இடைவிடாது ஆலோசனை இதனிடையே ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பும் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களுடன் இடைவிடாது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
















