பல்வேறு கட்சி மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், பாப்புலர் பிரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில், என்.சி.எச்.ஆர்.ஓ தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பச்சை தமிழகம் கட்சி துணை தலைவர் அருள்தாஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது,
பல்வேறு சகாப்தமாக தூத்துக்குடி மக்களுக்கு பிரச்சனை அளித்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழகத்தில் வேறு எங்கும் துவங்கக்கூடாத வகையில் தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
அனைத்து நாடுகளிலும் சட்டத்தை புறக்கணித்து செயல்படும் வேதாந்தா நிறுவனத்தை புறக்கணக்கும் வகையில் தீர்மானம் இயற்றப்பட வேண்டும்.
மேலும் தேர்தலுக்கு முன்பாக தூத்துக்குடி மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற கூட்ட தொடரில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு தீர்மானம் இயற்றப்படும் என நம்புகிறோம்.
மேலும் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் வகையில் தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பான இறந்தவர்களுக்கான நினைவு சின்னத்தை தூத்துக்குடியில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், அதற்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
















