பெங்களூர்- மத்திய குற்றப்பிரிவு போலீசார் திலக்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதி அக்தர் உசேன் என்பவரை சமீபத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலிமுல்லா (வயது 20) சேலத்தில் பதுங்கி இருப்பதும், அவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் நடத்தி வரும் எருமாபாளையம் குட்டப்பன்காட்டில் உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் (கார்மெண்ட்ஸ்) வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூரு போலீசார், சேலத்திற்கு வந்து அப்துல் அலிமுல்லாவை கைது செய்து 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில் பயங்கரவாத அமைப்புகள், அவர்கள் 2 பேருக்கும் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பேசி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் மற்றும் கியூ பிராஞ்ச் போலீஸ் அதிகாரிகள் சேலம் கோட்டை பகுதியில் வசித்து வந்த ஆசிக் (24) என்ற வாலிபரை அதிரடியாக கைது செய்துள்ளனர். பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் சேலத்தில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த ஆசிக், சேலம் கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சி.டி. ஒன்று கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என போலீசார் தீவிர விசாரணை.













