சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 270 பயனாளர்களுக்கு சுமார் 2 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான தங்கத்திற்கு தாலி, திருமண நிதியுதவி போன்ற திட்டங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 13 லட்சத்து 40 ஆயிரத்திற்கு அதிகமான பயனாளர்கள் பயன் பெற்றுள்ளனர்.
ராயபுரத்தில் அதிமுகவிற்கு எதிராக யார் நின்றாலும் இறுதியில் மூச்சு பேச்சு இல்லாத நிலையே ஏற்படும். ராயபுரத்தில் திமுக நின்னாலும், காங்கிரஸ் நின்னாலும் யாரும் டெபாசிட் வாங்க முடியாது. ராயபுரம் மக்கள் இரட்டை இலைக்கும், அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கும் வாக்களிப்பார்கள்.
அதிமுக கூட்டணியில் எந்தவித சலசலப்போ, ஊசலோ இல்லை. கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
அதிமுகவில் கட்சி நிகழ்ச்சிக்கான பணத்தை கட்சியினராகிய நாங்கள் செலவு செய்து கொண்டாடுகிறோம். ஆனால் திமுகவில் தற்போது நடைத்தப்படும் நிகழ்ச்சிகளில் பிரசாந்த் கிஷோர் அளிக்கும் பில்லிற்கு பணம் கட்ட முடியாமல் திமுகவினர் திணறி வருகின்றனர் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, மாநகர ஊழியர்கள், அதிமுகவினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.














