தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கீழ ஈரால் மண்டபம் அருகே நேற்று இரவு ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் மற்றும் தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர நாராயணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்
அப்பொழுது 45 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலையில் அடிபட்ட காயங்களோடு இறந்து கிடந்தார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர் அப்பொழுது தரையில் படுத்து இருந்த நபரை அவ்வழியாக வந்த மூன்று பேர் அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து தலையில் அடித்து படுகொலை செய்தது தெரிய வந்தது
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து செல்வம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய போது சில தினங்களுக்கு முன்பு மதுபான கடையில் செல்வத்திற்கும் தண்டையார்பேட்டை ஆதிதிராவிட காலனி பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி ஜாபர் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் தகராறு முற்றியதால் நேற்று இரவு இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து செல்வத்துடன் உடனிருந்த மகேஷ் சரவணன் உள்ளிட்ட மூன்று பேரையும் இன்று கைது செய்தனர்















