காசிமேட்டில் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 10 பேர் கரை திரும்பாததால் மீனவர்களின் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர். கடந்த 4 நாட்களாக புகார் அளித்தும் பலன் இல்லாததால் ராயபுரம்,என்னூர் விரைவுச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மீனவர்களைத் தேடும் பணியை முடுக்கி விட வலியுறுத்தியும் பத்திரமாக மீட்க கோரியும் உறவினர்கள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீன்வளத் துறை அதிகாரிகளின் சார்பாக முறையான பதில் அளிக்கவில்லை என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சாலை மறியலால் எண்ணூர் விரைவு சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பகுதிக்கு உடனடியாக விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது கடலோர காவல்படையின் கப்பல்கள் மூலமாகவும் ஹெலிகாப்டரின் உதவியோடு தேடி வருவதாகவும் கூறினார் மேலும் மீனவர்கள் சென்ற படகு கடைசியாக சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் அருகே இருந்ததற்கான சிக்னல்கள் வந்துள்ளதாகவும் அதனை வைத்து வெளிமாநிலங்களில் கரையோரமாக தேடி வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.















