நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொது இடங்களிலும், வீடுகளிலும் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது.
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, அநாகரிகமான உரையாடல்களோ இருக்க கூடாது.
அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம், சாதிகள் குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்கக் கூடாது.
அரசியல் கட்சிகள் மற்றும் மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேனர்கள் வைக்கக் கூடாது.
ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மனுதாரர், விழா ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.
நீதிமன்ற கட்டுப்பாடுகளில் ஒன்றை மீறினாலும், நிகழ்ச்சியை நிறுத்தி போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
















