அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் அடிப்படையில் அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இன சுழற்சி முறையை திருத்தி அமைக்க சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர், சட்டமன்ற பேரவையில் உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, சட்ட வல்லுனர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு இந்த சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
















