அரசு ஊழியர்களுக்காக.. சென்னை புறநகர் ரயில் சேவை அக்டோபர் 5ல் துவக்கம்;

0
323

சென்னையில் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில்சேவை துவங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டும் இதில் பயணிக்கலாம். சென்னையில் தினமும் 450 க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் சுமார் 8 லட்சம் பயணிகள் பயனடைந்தனர். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது சுமார் ஆறு மாத காலமாக புறநகர் ரயில்சேவை இயங்கவில்லை.
ரயில் சேவை என்பது சென்னையின் ஜீவநாடி. அந்த ரயில் பயணம் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்து போய்விட்ட ஒன்று. மேலும் இந்த ரயில்களில் நம்பி மாற்றுத்திறனாளிகள் பலரும் வாழ்க்கை நடத்தி வந்தனர். ரயில் இயக்கப்படாததால் இவர்கள் அனைவருக்குமே பெரும் இழப்பு ஏற்பட்டது. எப்போது மறுபடியும் புறநகர் ரயில்சேவை துவங்கும் என்ற ஏக்கம் சென்னைவாசிகளின் கண்களில் இருந்து கொண்டே இருக்கிறது. 5ம் தேதி முதல் இந்த நிலையில் மருத்துவ பணியாளர்களின் போக்குவரத்துக்காக ஒரு சில இடங்களில் சிறப்பு ரயில்கள் சிட்டிக்குள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த ரயில்சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மருத்துவம், மின்சாரம், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணியில் இருப்போர் என்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டி பயணிக்கலாம். அரசு ஊழியர்களுக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தமிழக அரசில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்காக இந்த ரயில் இயக்கப்படும். தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தமிழக அரசு பணியாளர்கள் பயணிக்க ரயில் சேவையை இயக்க வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை அடுத்து உடனடியாக தெற்கு ரயில்வே அரசு ஊழியர்களுக்காக ரயில்களை இயக்க சம்மதித்துள்ளது. சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இந்த ரயில்கள் புறப்பட்டுச் செல்லும். இந்த மின்சார ரயிலில் பயணிக்க கூடியவர்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணம் கிடையாது. ரயில் நிலையத்திற்குள் வரும்போது உடல் வெப்பநிலை அறியும் சோதனை நடத்தப்படும். கிருமிநாசினி வழங்கப்படும். முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம் ஆகும். இந்த ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதத் துவக்கத்தில் இருந்து பொதுமக்களும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் சீரடைய வேண்டுமானால் வேலைக்கு செல்வோரும், தொழில் நிமித்தமாகச் செல்வோருக்கும், இந்த புறநகர் ரயில் சேவை என்பது அத்தியாவசியம் என்பதை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்பது, சென்னைவாசிகள் கோரிக்கையாக இருக்கிறது.