சன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. ஜான் கென்னடி அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஜான் கென்னடி குடும்பத்தில் ரூ. 5 லட்சம் இழப்பீடு அளித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு.பி.ஜான் கென்னடி அவர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 17.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். சன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. ஜான் கென்னடி அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால், அதற்கான மருத்துவ செலவினையும், உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
















