அதிமுக- பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில், பொதுக்குழு கூட்டம் தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என உத்தரவிட்டார்.
















