வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் முன்கள தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வராமல் இருப்பதற்காக சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. அந்தவகையில் தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால் அவர்களிடமிருந்து முதன்முறை ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், அதனையும் மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வரும் நபர்களை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதித்து வெளியே சுற்றித்திரிந்த 29 பேரிடம் இருந்து தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.58 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
















