தியாகராய நகரில் பிரைம் சரவணா ஸ்டோர் துணிக்கைடையும், உஸ்மான் சாலையில் நகைக்கடையும் செயல்பட்டு வருகிறது. வங்கியில் வாங்கிய கடனைக் கட்டாததால் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.
1970ம் ஆண்டு தி.நகரில் சண்முகசுந்தரம் என்பவரால் சிறிய கடையாக தொடங்கப்பட்டது சரவணா ஸ்டோர். 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருடைய வாரிசுகள், யோகரத்தினம், ராஜரத்தினம், செல்வரத்தினம் ஆகியோர் கடைகளை நிர்வகிக்க ஆரம்பித்தனர்.
சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உருவாயின. தமிழகம் மட்டுமில்லாமல், பெங்களூர், டெல்லி, மும்பை என 61 சரவணா ஸ்டோர் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. யோகரத்தினத்தின் முதல் மகன் பல்லக்கு துரை, 2015ஆம் ஆண்டில் இருந்து பிரைம் சரவணா என்ற பெயரில் ஜவுளி மற்றும் நகை கடைகளை நடத்தி வருகிறார்.இந்த நிலையில்தான், 2017 ஆம் ஆண்டு தொழிலில் கடனாக 288 கோடியே 67 லட்சம் ரூபாயை தி.நகர் இந்தியன் வங்கி கிளையில் இவர் பெற்றிருக்கிறார். பின்னர் எந்த தொகையும் செலுத்தாததால் வங்கி சார்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கடனை கட்டச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது. அப்போதும் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் பணத்தைக் கட்டவில்லை. இதையடுத்து, பிரைம் சரவண ஸ்டோருக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ரங்கநாதன் தெருவிலுள்ள கடை மற்றும் உஸ்மான் சாலையிலுள்ள நகைக்கடை கட்டிடத்தை, போலீஸ் துணையுடன் சென்ற அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். கடையை ஜப்தி செய்து சீல் வைக்க இருப்பதாக பிரைம் சரவணா ஸ்டோர்ஸ்க்கு ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உஸ்மான் சாலையில் இருக்கும் பிரைம் நடைக்கடையில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு, மொத்த கடையையும் காலி செய்திருக்கிறது நிர்வாகம். தி.நகரில் இருக்கும் துணிக்கடையை மட்டும் விட்டுவிட்டார்கள். அதனால் ஜப்தி செய்து சீல் வைப்பதற்கு முன்பு கடையிலுள்ள பொருட்களை அப்புறப்படுத்த 4 மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஜவுளி பொருட்களை எடுத்தபிறகு கடைக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
















