சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கண் மருத்துவமனையின் குடிநீர் தேவைக்காக கட்டிடத்தின் பின்புறம் மழைநீர் சேகரிப்புத் தொட்டி 15 அடி ஆழத்தில் தோண்டப்பட்டு வருகிறது. அந்த பணிக்காக இன்று மதியம் 2 மணியளவில் வந்த ஆகாஷ், வீரப்பன் மற்றும் சின்னதுரை ஆகிய 3 பணியாளர்கள் குழிக்கு அருகில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குழிக்கு ஓரமாக இருந்த 3 பேரும் மண் சரிந்து குழியில் விழுந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 2 தீயணைப்பு வாகனங்களில் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இதுவரை ஆகாஷ் மற்றும் வீரப்பன் ஆகிய இருவரும் கயிறு கட்டி குழிக்குள் இறங்கி மேலே கொண்டு வரப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் அருகில் இருக்கக்கூடிய ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மண் குழியில் சிக்கிய சின்ன துறையை தீயணைப்பு படை வீரர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
















