கரூர் – வேலாயுதம்பாளையம் மழைவீதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம்(வயது 53). ஆட்டோ டிரைவரான இவர் தனது ஆட்டோவை புகளூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் இருந்து ஓட்டி சென்று சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கரூர் ஆண்டான்கோவில் பெரியார் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் சுரேஷ்(24) என்பவர் சேலத்தில் இருந்து காரில் கரூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது கார் மோதியது. இதில் ஆட்டோவின் முன் பகுதியும், காரின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் இப்ராஹிம், காரில் பயணம் செய்த பெரியசாமி, சுரேஷின் அண்ணன் கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் இப்ராஹிம் உயிரிழந்தார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சுரேசுக்கு எந்தவித காயமும் இன்றிஉயிர் தப்பினார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்தவடிவேல் வழக்குப்பதிவு செய்து இப்ராஹிம்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்